புதுதில்லி : சிறுபான்மையினருக்கான சிறப்பு சலுகைகள் மத்திய பட்ஜெட்டில் இடம் பெறுவது குறித்து மத்திய அரசு தீவிர பரிசீலனை செய்து வருகிறது. முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பிரதமர் மன் மோகன் சிங்கை சந்தித்து பேசியதன் விளைவாக மத்திய அரசு இப்பரிசீலனையை மேற்கொண்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் மழைக் காலக் கூட்டத்தொடரின் போது பிரதமர் மன் மோகன் சிங்கை சந்தித்து பேசிய முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசின் சிறுபான்மையினர் நலனுக்கான திட்டங்கள் சரிவர அமல்படுத்தப்படுவதில்லை என அவர்கள் தெரிவித்தனர். அதற்கு பிரதமர் மன்மோகன் சிங் இது தொடர்பாக மத்திய திட்டக் குழுவின் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவை சந்தித்து பேசுமாறு அறிவுறுத்தியதாக தெரிகிறது
.
.
இது குறித்து அமைச்சகங்களுக்கு இடையிலான கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் பரிந்துரைகள் அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு பரிசீலனைக்குச் செல்லும் என்பது குறிப்பிடத்ததக்கது. சிறுபான்மையினர் தொடர்பான திட்டங்களை நேரிடையாக வட்டார அளவில் நிறைவேற்றலாம் என அமைச்சரவைகளுக்கு இடையிலான கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட யோசனை குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 18 சதவீதத்தினர் சிறுபான்மையினர் ஆவர். எனவே, அவர்களுக்கு மத்திய பட்ஜெட்டில் சலுகைகளை அளிக்க சிறப்புத் திட்டங்களை இடம்பெற செய்வதன் அவசியத்தை அமைச்சகங்களுக்கு இடையிலான கடிதம் வலியுறுத்துகிறது.
12-வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு, சிறுபான்மையினருக்கான திட்டங்கள், அவற்றின் குறைபாடுகள் குறித்து ஆய்வு நடத்த பிரதமர் அலுவலகம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது. இரண்டு மாத காலத்தில் இப்பணிகள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நன்றி
inneram.com
No comments:
Post a Comment